சாயல்குடி,செப்.16: கடலாடி அருகே தேராங்குளம் கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர், கருப்பசாமி கோயில் 4 ஆண்டு வருடாபிஷேகத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடந்தது. தேராங்குளம் முதல் கடலாடி, முதுகுளத்தூர் சாலையில் 6 கி.மீட்டர் தூரம் வரையிலான பெரிய மாடுகள் போட்டியில் 6 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது.
இதில் மேலச்செல்வனூர் வீரகுடிமுருகைய்யனார் வண்டி மாடுகள் முதலிடத்தையும், தேராங்குளம் அன்புமுனீஸ்வரன் சித்தார்த் வண்டி மாடுகள் இரண்டாம் இடத்தையும், கமுதி ஆப்பனூர் வேலு, உக்கிரபாண்டி வண்டிமாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. 4 கிலோமீட்டர் நடந்த சின்ன மாடுகள் பந்தயத்தில் 14 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் மேலச்செல்வனூர் வீரக்குடி முருகைய்யனார் வண்டி மாடுகள் முதல் இடத்தையும், பூலாங்கால் அக்பர் வண்டி மாடுகள் இரண்டாமிடத்தையும், மீனங்குடி கல்லாடிபெருமாள் ராமுஜெகநாதன் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாடு ஓட்டி மற்றும் சாரதிக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.