கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு: ரூ.100 முதல் 200 வரை கூடுதலாக வைத்து விற்பனை

சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால்,  கோயம்பேடு மார்க்கெட்டில் கனகாம்பரம் உள்ளிட்ட பல பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ரூ.100 முதல் 200 வரை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நிலக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 30 முதல் 40 லாரிகளில் மல்லிகை, சாமந்தி, கனகாம்பரம் மற்றும்  சாக்லேட் ரோஸ் என பலவிதமான பூக்கள் வருகின்றன. இவற்றை வாங்க இளம்பெண்கள், சிறு வியாபாரிகள் என பல தரப்பினர் ஆர்வமுடன் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஈகை பெருநாளான ரம்ஜான் இன்று மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி,  கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம்  ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் அதே விலை நீடித்தது. நேற்று முன்தினம் ரூ.240க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லி, ரூ.50 அதிகரித்து, நேற்று காலை ரூ.300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  ஒரு கிலோ பன்னீர் ரோஸ் ரூ.60க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், சம்பங்கி ரூ.90க்கும், சாமந்தி ரூ.160க்கும் அரளி பூ ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு குறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மூக்காண்டி கூறுகையில், ‘‘ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. ஒரு கிலோ ரூ.240க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ.300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த பண்டிகை நாள் முடிந்த பிறகு பூக்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.’’ என்றார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு