ஊட்டி, ஜூன் 12: நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டதுடன், போதிய சூரிய வெளிச்சத்துடன், இதமான கால நிலை நிலவி வருகிறது.
இதனால் தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டு வளர்ந்து, பசுந்தேயிலை மகசூல் வெகுவாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் தேயிலை பறிக்க போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் தேயிலைத்தோட்டம் வைத்துள்ள விவசாயிகள், பேட்டரியால் இயங்கும் நவீன அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர். சில விவசாயிகள் கை அறுவடை இயந்திரங்கள் மூலமாக தங்களது தோட்டங்களில் வளர்ந்துள்ள பசுந்தேயிலை கொழுந்துகளை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.