கோத்தகிரி, ஜூலை 13: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று பிற்பகல் முதல் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான கீழ் கோத்தகிரி, கோடநாடு, கட்டபெட்டு, அரவேனு, கொட்டக்கொம்பை, தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது.
தொடர்ந்து, மாலை நேரம் வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் காலநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் ஏற்பட்டது. இந்நிலையில், மழையால் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவர்கள், தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.