பந்தலூர்: பந்தலூர் அருகே கொளப்பள்ளி மாரியம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் அகற்றப்படாமல் இருக்கும் குப்பையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி மாரியம்மன் கோயில் அருகே ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருப்புவாசிகள் கொட்டும் குப்பைகளை சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல் இருப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குவிந்து இருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சேரங்கோடு ஊராட்சிக்கு பலமுறை கூறியும் இதுவரை குப்பைகளை அகற்றாமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.