சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தம்மை சிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை வழக்கில் சிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முறையிட்டனர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக செயானிடம் பெற்ற ரகசிய வாக்குமூலத்தில் தன்னையும் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது என்றார். இந்த வழக்கில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்ற அவர், அரசியல் காரணங்களுக்காக கோடநாடு வழக்கை தமிழ்நாடு அரசு கையில் எடுத்திருப்பதாக குற்றம்சாட்டினார். வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால் தற்போது விசாரணை தேவையற்றது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். கோடநாடு வழக்கு விசாரணையை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் இன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. …