கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராம சாலையல மேம்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்திலிருந்து திருநாவுக்கரசு நல்லூர் செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர தார்சாலை அமைக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த சாலை கடந்த 5 வருடங்களாக பராமரிக்கப்படாமல் விட்டுவிட்டதால் மிகவும் மோசமாகவும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் திருநாவுக்கரசுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் மாணவர்கள், பெரியவர்கள் மற்றும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். திருநாவுக்கரசு நல்லூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பள்ளி மாணவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை மேம்படுத்த கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சாலையை மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….