குடியாத்தம், நவ.23: குடியாத்தம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னதோட்டாலம் பாலாற்றில் கடந்த 3ம்தேதி மாட்டுவண்டி மூலம் சிலர் மணல் கடத்தி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் கடத்தலை தடுத்தனர். அப்போது, மாட்டுவண்டி உரிமையாளரான கொண்டசமுத்திரம் ஊராட்சி செயலாளர் ராஜசேகர்(38) மற்றும் வினித்(30) ஆகியோர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும், மாட்டுவண்டி ஏற்றி கொலை செய்து விடுவேன் என்று போலீசாரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மேல்பட்டி போலீசார் ராஜசேகர் மீது பதிவு செய்தனர். இதையறிந்த ராஜசேகர் அலுவலகத்தில் விடுமுறை கடிதம் கொடுத்து விட்டு தலை மறைவாகிவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் அலுவலக பணி காரணமாக பிடிஓ அலுவலகத்திற்கு வந்தார். இதையறிந்த டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் ராஜசேகரை பிடிஓ அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் ஊராட்சி துறை அதிகாரிகள் ராஜசேகரை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பிடிஓக்கள் கல்பனா மற்றும் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகின்றனர்.