சென்னை: குன்றத்தூரில் நேற்று இயற்கை தாயகம் என்னும் அறக்கட்டளை துவக்க விழா நேற்று நடைபெற்றது. குன்றத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் பள்ளி மாணவ, மாணவியர் பறை இசைத்தல், சிலம்பம், சுருள் வாள் சுற்றுதல் உள்ளிட்ட கலைகளை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டி, தங்களது திறமைகளை வெளிக் காட்டினர். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு பேசுகையில்; இங்கே முதல் நிகழ்ச்சியாக மாணவர்கள் பறையை இசைத்தது எனக்கு மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. பண்டைய தமிழக போர்க்களத்தில் கூட, முதலில் இசைக்கப்படுவது பறை இசையே. அதனைத் தொடர்ந்தே சிலம்பம், வாள் வீச்சு போன்ற போர் வீரர்கள் களத்தில் இறங்கி களம் காண்பர். ஒரு காலத்தில் அழிந்து வந்த பறை இசையை, தற்போது மாணவர்கள் ஆர்வத்துடன் பயின்று, அந்த இசையை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டு வரும் மாணவர்களின் செயல் பாராட்டத்தக்கது. இயற்கை வளம் மட்டுமின்றி கடல் வளம் கூட தற்போது நமது தமிழகத்தில் அழிந்து வருகிறது. அதனால் கடற்கரைகளின் கரைகளை பலப்படுத்தி, கடலையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆற்று நீர் செல்லும் வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகள் செய்து, கட்டிடம் கட்டுவதை தவிர்க்க வேண்டும். இயற்கை வளங்கள் அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பெல்லாம் திருமணத்திற்கு செல்வதை விட, இறப்பு வீட்டிற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால், இறப்பு வீட்டிற்குக்கூட செல்ல முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு ஒரு கட்சியை விட்டு, ஒரு கட்சியை குறை சொல்லி பயனில்லை. இயற்கையை பாதுகாக்க என்ன வழி என்று தான் நாம் பார்க்க வேண்டும் என்றார்….