சென்னை: கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 700க்கும் கீழ் உள்ளது. இறப்பு எண்ணிக்கையும் தினசரி குறைந்து வருகிறது. 30 மாவட்டங்களில் இறப்பு இல்லை என்ற நிலை தற்போது உள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா பல்வேறு நாடுகளில் வேகமாக பரவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் ஒமிக்ரான் பரவினாலும் இன்னும் தமிழகத்திற்குள் நுழையவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். தமிழகத்தில் பரவுவதை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளுக்கு கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வருகிற 15ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (13ம் தேதி) காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது கொரோனா குறைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதும் குறைந்து வருகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது….