வேலூர் : வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் நடேசன். நூறு வயதை கடந்த இவர் தற்போதும் விவசாய பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் மூச்சுத்திணறல், காய்ச்சல் பிரச்னைகளுடன் கடந்த 22ம் தேதி வேலூர் நாராயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலில் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அந்த மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 1ம் தேதி மாலை அவர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் தொடர்ந்து 10 நாட்கள் டாக்டர்களின் பரிந்துரையின்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும், தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.கொரோனா தொற்றுடன் மூச்சுத்திணறலுடன் வந்த நூறு வயது முதியவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பாலமுருகன், நந்தினி, அரவிந்த் ஆகியோருக்கு மருத்துவமனை இயக்குனர் பாலாஜி பாராட்டு தெரிவித்தார்….