கொடைக்கானல்:கொடைக்கானலில் வாக்காளர் பட்டியலில் இறந்தவரின் பெயர் இடம்பெற்றிருப்பது உள்பட பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. சட்டமன்ற தேர்தல் ஏப். 6ம் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இந்த பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம் இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே வாக்காளரின் பெயர், இரண்டு இடங்களில் வெவ்வேறு எண்களுடன் இடம் பெற்றுள்ளன. இது கள்ள ஓட்டு போடுவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சியினர் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் பட்டியலில் உள்ளன. ஒரே வாக்காளரின் பெயர், 2 இடங்களில் உள்ளது. சில இடங்களில் கணவரின் பெயர், தந்தையின் பெயருக்கு பதிலாக குடியிருக்கும் பகுதியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….