சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு வீட்டில் கொள்ளை யார் ஆட்சியில் நடந்தது. சட்டம், ஒழுங்கைப்பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு என்ன அருகதை இருக்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி: கொங்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்கள் வெள்ளம் கூடி அவரை வரவேற்றது. இதை எல்லாம் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல்தான் பேட்டி என்ற பெயரில் இல்லாததையும், பொல்லாததையும் எடப்பாடி பேசியிருக்கிறார். வெள்ளலூரில் பேருந்து நிறுத்தத்தை கிடப்பில் போட்டு விட்டதாக சொல்லியிருக்கிறார். அது பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய இடமே அல்ல. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமானவர்கள், அந்த இடத்தை எல்லாம் வளைத்து போட்டு, அந்த இடமே ஏறத்தாழ வேலுமணி குடும்பத்தாருக்கே சொந்தம் என்ற அளவில் இருக்கிறது. அதேபோல அவினாசி, அத்திக்கடவு குடிநீர் திட்டத்தை பற்றி சொல்லியிருக்கிறார். 95 சதவீதம் வேலை முடிந்து விட்டது. இன்னும் 2 மாதத்தில் அது பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றி எடப்பாடி சொல்கிறார். தி.நகரில் கோடிக்கணக்கில் செலவு செய்து, கடந்த மழைக்காலத்தில் பாண்டி பஜாரே மிதந்தது. கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளத்தை வெட்டினார்கள். அதில் வெறும் சாக்கடை நீர் தான் நிற்கிறது. ஸ்மார்ட் சிட்டியில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது. கான்ட்ராக்ட் எல்லாம் யார் யாருக்கு கொடுத்தார்கள், விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தது எடப்பாடிக்கு தெரிந்து விட்டது. இதை எல்லாம் மூடி மறைப்பதற்காக எடப்பாடி சொல்லியிருக்கிறார். சட்டம், ஒழுங்கை பற்றி எடப்பாடி சொல்கிறார். அதை பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதையே கிடையாது. கொட நாட்டில் நடந்த கொள்ளை யார் ஆட்சியில் நடந்தது. எடப்பாடி முதல்வராக இருக்கும்போதுதானே நடந்தது. தலைவி வீட்டையே காக்க முடியாத நீங்கள், சட்டம் – ஒழுங்கை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவம் நடக்கிற போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, படுக்கையில் இருக்கிறார். செய்தி கேள்விப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு எல்லாம் உடனடியாக டிஜிபியை, உள்துறை செயலாளரை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆன்லைன் ரம்மி என்பது இங்கே மட்டும் தடை செய்து விட்டால் போதாது. இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். உகந்த நடவடிக்கை எடுக்க சந்துரு கமிட்டி அளித்த உரிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து விட்டார்கள். முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி இணைந்துள்ளார். இப்படி பல குட்டிகள் வரப்போகிறார்கள். இதை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல், அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார் எடப்பாடி. எங்களுடன் விவாதிக்க ஒரு இட த்தை தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது. எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்து இருக்கிறோம் என்பதுபற்றி விவாதிக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்….