‘‘நாடாளுமன்ற தேர்தலுக்குள் கதர் கட்சிக்கு வெயிட்டான தலைவரை போட புதுச்சேரியில் நட்பு தரப்பு கூட இருந்தே குழி பறிக்குதாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் ஒரு காலத்தில் கதர் கட்சி வெள்ளை கலர் சட்டையில் பெருந்தலைகளாக உலா வந்த தலைவர்களால் வெயிட்டாக இருந்து வந்தது. ஆனால், புல்லட்சாமி, அவருடைய மருமகன் சிவமானவரு ஆகியோரால் சிரமமான நிலையில் இருக்காம். அதை ஒரு தொண்டர் இப்படி நக்கல் அடித்தாராம், எப்டி இருந்த நான், இப்டி ஆயிட்டேன்னு’ சொன்னதை கேட்டு கதர் கட்சி தலைவர்களே சிரிக்கிறாங்களாம். இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் வலுவான கட்சியாக, வலிமை, செல்வாக்குள்ள தலைவரை உருவாக்கிட வேண்டும் என்ற டெல்லி ஆணையை ஏற்று தலைவர் தேடும் படலம் கட்சியில் நடக்குதாம். மேலிடப்பொறுப்பாளர்களிடம் நல்ல பெயர் இருக்கும் அனந்தமானவரு பெயரை தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கிறார்களாம். ஆனால் சில மூத்த நிர்வாகிகள், மறைமுகமாக எதிர்க்கிறார்களாம். ஆனந்தமானவரை தலைவராக போட்டால், அவரும் தன்னுடைய தனிப்பட்ட செலவாக்கை வளர்த்து கொண்டு, அவரும் ஒரு காலத்தில் கட்சி மாறிவிடுவார். எனவே அவருக்கு கொடுக்க கூடாது என மேலிடத்தலைமைக்கு தூபம் போடுகிறார்களாம். சில சீனியர் தலைவர்கள் அனந்தமானவரிடம் நல்லா பேசுறாங்களாம். ஆனா பதவி என்றவுடன் எதிராக களமிறங்கி காலை வாருவதாக அனந்தமானவர் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாங்கனிக்கும் கொடநாடுக்கும் என்ன தொடர்பு… மர்மக்கதை நாவல் போல செல்கிறதே…’’ சொல்லி சிரித்தார் பீட்டர் மாமா.‘‘கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளையை தொடர்ந்து நடந்த தொடர் சாலை விபத்து சாவு, தற்கொலை சம்பவத்தை கேட்டால் ஈரக்கொலை நடுங்கும் காட்சிகள் படர்ந்து விரிஞ்சுக்கிட்டு வருது. ‘ஆட்சி’ பவரை வைத்துக்கொண்டு ஆடிய ஆட்டம் தற்போது ஒவ்வொன்றாக வெளியவந்த வண்ணம் இருக்காம். பால் வடியும் முகத்துக்குள் இத்தனை கொடூரங்களான்னு பொதுமக்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் காட்சிகள் அரங்கேறிக்கிட்டே வருது. இதனால, இதுல சின்ன துரும்பு அளவுல சம்பந்தப்பட்டங்க கூட இப்போது உயிருக்கு பயந்து ஊரை காலி செய்துட்டு வர்றாங்களாம். இந்த விவகாரத்துல மாங்கனி மாவட்டத்துல வேலை செஞ்சுக்கிட்டு வந்த 3 ஸ்டார் காக்கி ஒருவரையும் போலீஸ் விசாரிக்க திட்டம் போட்டிருக்காங்களாம். கொடநாடு கொள்ளை கும்பலுக்கு தலைவனான கனகராஜ், விபத்துல மர்மமா டெத் ஆகிட்டாரு. அக்சிடெண்ட் நடந்த இடம் ஆத்தூர். ஆனா இந்த தகவல உடனே எஸ்.பி.,ஆபீசுக்கு போன் போட்டு ஒரு 3 ஸ்டார் காக்கி அதிகாரி சொல்லியிருக்காரு. இந்த 3 ஸ்டார் காக்கி அதிகாரி வேலை பார்த்த சப்-டிவிசன் சங்ககிரி. ஆனால் ஆத்தூர் சப்-டிவிசன் பகுதியில் நடந்த விபத்து குறித்த தகவல் அவருக்கு எப்படி முதல்ல கிடச்சதுங்குற சந்தேகம் அதிகாரிகளுக்கு இப்போ வலுத்திருக்காம். இந்த 3 ஸ்டார் காக்கி அதிகாரி, அந்த முக்கிய பிரமுகரின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டவர் என்ற பேச்சும் காக்கி வட்டாரத்துல இருக்கு. மாங்கனி அதிகம் விளையும் டிஸ்டிரிக்ட்டுல இப்போ ஒர்க் பண்றாரு. இவரும் கொடாநாடு விவகாரத்துல வில்லனாக நிற்கிறாரு…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘‘தேர்தலில் நம்பி கழுத்தறுத்த குக்கர் தலைமை மீது அதன் மாவட்ட செயலாளர்கள் கடும் கோபத்துல இருக்காங்களாம். கட்சி தலைமை போன் வந்தாலே, அண்ணன் ஆயில் பாத்து எடுத்துட்டு இருக்காருனு அடிபொடிகள் நக்கலாக சொல்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தொண்டைமான் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட குக்கர் கட்சி செயலாளர்கள் தேர்தலுக்கு பிறகு சொந்த பிசினசில் தீவிரமாக இருக்காங்க. அரசியலை பார்ட் டைம், பார்க்காமல் இருப்பது என்ற மூடில் குக்கர் மாவட்ட செயலாளர்கள் நினைத்து செயல்பட்டு வர்றாங்க. குறிப்பாக, 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் செலவுக்காக தங்களது வங்கி கணக்கில் இருந்த பல லட்சங்களை ஜூரோ பேலன்ஸ்க்கு கொண்டு போயிட்டாங்க. ஆனால், 6 தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் செலவுக்காக தலைமையிடத்தில் இருந்து பணம் வரும். தேர்தல் செலவுகளை வேட்பாளர்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று மாவட்ட செயலாளர்கள் சொன்னதை நம்பி வேட்பாளர்களும் வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்தனர். ஆனால்… இதுவரை தலைமையிடத்தில் இருந்து ஒரு பைசா கூட வரவில்லையாம்… இதனால் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமலும்… வெளியில் தலைகாட்ட முடியாமலும்… மாஜி வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். மாவட்ட செயலாளர்களிடம் கேட்டால் நாங்கள் என்ன செய்வது தலைமையிடத்தில் இருந்து இதுவரை பணம் வரவில்லை. மாவட்ட செயலாளர்கள் என்ற முறையில் நாங்களும் தான் தொகுதிக்காக செலவு செய்தோம். எங்களுக்கும் இதுவரை தலைமை கொடுக்கவில்லை. தலைமை சொன்னதை நம்பி தான் சொன்னோம். எங்களை என்ன செய்ய சொல்கிறீர்கள்… நாங்களே தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளோம் என ஒரு குண்டை தூக்கி போட்டார்களாம். வேறு கட்சிக்கு மாறுவது என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம். அது எந்த கட்சி என்பது டிஸ்கஷனில் இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. …