குழித்துறை : விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜகுமார் மற்றும் ஊழியர்கள் குழித்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் குலசேகரம் சாலை வழியாக சென்றது. அதனை பின் தொடர்ந்த அதிகாரிகள் காரை சுருளகோடு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர். அப்போது சாலையோரம் காரை நிறுத்தி விட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த காரை சோதனை செய்தபோது, ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அந்த அரிசி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து அரிசியை காப்புக்காடு வாணிப கழக குடோனிலும் ,காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்….