ஈரோடு : கூலி உயர்வு வழங்கக் கேட்டு சுமைப் பணித் தொழிலாளர்கள் பேரணியாகச் சென்று வருவாய்க் கோட்டாட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.ஈரோடு மாவட்ட சுமைப்பணியாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தலைமையில், கிருஷ்ணா தியேட்டர் அருகே இருந்து சுமைப் பணியாளர்கள் ஊர்வலமாக வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தைச் சென்றடைந்தனர். பின்னர், அனைத்து வகை தொழிலாளர் ஐக்கிய தொழிற்சங்க பொதுச் செயலாளர் பி.மாரிமுத்து முன்னிலையில், வருவாய்க் கோட்டாட்சியர் ரங்கநாதனிடம் மனு அளித்தனர். அதில், ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி ஒப்பந்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளாகிவிட்டது. மேலும் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. 1,500க்கும் மேற்பட்ட சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 122 மட்டுமே கூலியாக தருகின்றனர். எனவே கூலி உயர்வு வழங்கவேண்டும். மேலும், சுமைப் பணித் தொழிலாளர்களை கொத்தடிமை போல நடத்தும் முறையைக் கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்படுள்ளது. இதில், நிர்வாகிகள் பழனிசாமி, அர்த்தநாரி, எஸ்.மாரிமுத்து உள்பட திரளான சுமைப் பணித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்….