கூடலூர் அருகே கதம்ப வண்டு கொட்டி பெண் தொழிலாளி பலி

கூடலூர், ஜூலை 4: கூடலூர் அருகே, தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தபோது, கதம்ப வண்டு கொட்டியதில் பெண் தொழிலாளி பரிதாபமாக பலியானார். தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் தண்ணீர் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி நல்லம்மாள் (45), கூலித்தொழிலாளி. நேற்று முன் தினம் நல்லம்மாளும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி என்பவரும் லோயர்கேம்ப் மயானம் செல்லும் வழியில் உள்ள தனியார் தோட்டத்தில் களை எடுக்க சென்றனர். அங்கு களை எடுத்துக் கொண்டிருந்தபோது நல்லம்மாளை கதம்ப வண்டு கொட்டியது.

இதில், அவருக்கு தலை, கைகளில் காயம் ஏற்பட்டது. அவரது கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, டூவீலரில் ஏற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் நல்லம்மாள் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் பவானி கொடுத்த புகாரின் பேரில், குமுளி (லோயர்கேம்ப்) போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை