பள்ளிகொண்டா, ஆக.5: ஆடி மாதம் 3ம் வெள்ளி திருவிழாவில் எல்லையம்மன் கோயிலில் உள்ள வேம்பு மரத்தில் குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் தொட்டில் கட்டி மனமுருக பிரார்த்தனை செய்தனர். பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் வெள்ளியில் நாக வாகனத்திலும், 2ம் வெள்ளியன்று கேடய வாகனத்திலும் எழுந்தருளிய உற்சவ எல்லையம்மன் வீதியுலா வந்து பக்தரகளுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து ஆடி 3ம் வெள்ளியை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை முதலே பக்தர்கள் எல்லையம்மன் கோயிலை நோக்கி படையெடுத்த நிலையில், கோயிலை சுற்றி திரும்பிய இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை அலையாய் காட்சியளித்தன.
மேலும், எல்லையம்மனுக்கு நேர்த்தி கடனை நிறைவேற்ற கோயில் குளத்தை சுற்றிலும் ஆடு, கோழிகளை பலியிட்டு, அம்மனுக்கு படையல் வைத்து கூழ் ஊற்றி வழிபட்டனர். மேலும், திருமண வரம் வேண்டி வேம்பு மரத்தில் ஆண்கள் மணப்பெண் பொம்மைகளை கட்டியும், பெண்கள் தாலி கட்டியும் பிரார்திக் கொண்டனர். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதியினர் வேம்பு மரத்தில் தொட்டில் கட்டி மனமுருக வேண்டி கொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில், எம்எல்ஏ நந்தகுமார் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாரம் மற்றும் மரியாதை செய்யப்பட்டது. மேலும், விழாவில் சுற்றுப்புற கிராம பகுதிகள், ஆந்திர கர்நாடக மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால் கொண்டேயிருந்ததால் தேசிய நெடுஞ்சாலை உட்பட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.