ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட, அங்கன்வாடி மைய கட்டிடத்தை, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சி வசந்தநகர் பகுதியில், கடந்த 2015- – 16ம் ஆண்டு ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை இந்த அங்கன்வாடி கட்டிடம் திறக்கவில்லை. இதனை சுற்றி அடர்ந்த செடி கொடிகள் வளர்ந்து இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. வசந்த நகரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் இருந்தும் திறக்கப்படாமல் பூட்டியிருக்கும் காரணத்தினால் இப்பகுதியில் உள்ள குழந்தைகளை தர்மராஜா கோவில் அருகே உள்ள பழுதடைந்த கட்டிடத்திற்கு குழந்தைகள் செல்கின்றனர். குழந்தைகள் வேறு மையத்திற்கு நீண்ட துாரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக வசந்த நகர் பகுதியில் உள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்….