மதுரை, ஜூன் 28: மதுரையை அடுத்த குலமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உறுப்பினர் கல்வித் திட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் உத்தரவின்படி, மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க செயலாளர் கண்ணுச்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் மற்றும் வட்டியுடன் கூடிய மானிய கடன் திட்டங்கள் மற்றும் கூட்டுறவு சங்கம் வழங்கும் இதர சேவைகள் குறித்து விளக்கப்பட்டது. அதேபோல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று, கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் பா.உதயகுமார் எடுத்துரைத்தார். மேலும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் பதிலளித்தார்.