கிருஷ்ணகிரி, ஏப்.11: கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு, 211 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கலந்துகொண்டு வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலைவசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 211 மனுக்களை வழங்கினர். இதை பெற்றுக்கொண்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை, மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.