பெரியபாளையம், ஜன. 28: கும்மிடிப்பூண்டி முதல் ஆரணி வரை இயக்கப்படும் புதிய பேருந்து சேவையை கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் புதிய வழித்தடத்தில் ஒரு பஸ் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சட்டசபையில் உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி தொகுதியை இணைக்கும் வகையில் அரசு போக்குவரத்து கழக பேருந்து தடம் எண்- 115பி என்ற பஸ் இயக்கப்பட்டது.
இந்தப் பேருந்து கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் இருந்து புதுகும்மிடிப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, பாத்தபாளையம், பில்லாகுப்பம், குருவராஜகண்டிகை, ராஜாகண்டிகை, ஐயர்கண்டிகை, கண்ணூர், பாலவாக்கம், சுப்பிரமணியநகர் வழியாக ஆரணி பேருந்து நிலையம் வந்து சேரும். இந்நிலையில் இந்த பேருந்து சேவையை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு பேருந்தை கொடி அசைத்து துவக்கி வைத்து, பிறகு பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.
மேலும், பேருந்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆரணிக்கு வந்தார். அவருக்கு ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து தலைமையில் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பஸ் நிறுத்தம் அருகே உள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்