கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஏரியில் மணல் திருடிய நபர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஏனாதி மேல்பாக்கம், அயநெல்லுர், சோழியம்பாக்கம், ரெட்டம்பேடு பகுதி ஏரிகளில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சியில், போலீசார் கண்காணித்தபோது ஏரியில் இருந்து டிராக்டரில் மணல் எடுத்துக் கொண்டிருக்கும்போது சிலரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது மணல் கடத்தல் கும்பல், போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மணல் திருட்டை தடுத்துநிறுத்தினர். இதுசம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்தில் கேட்டபோது, ‘’ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், சுடுகாடு பகுதிக்கு சமன் செய்வதற்காக மணல் எடுக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளனர். ‘இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மணல் எடுப்பதை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….