குப்பை கொட்டும் காம்பேக்டர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து பராமரிப்பு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: குப்பைகள் கொட்டப்படும் காம்பேக்டர் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து பராமரிப்பு செய்யப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து சேகரிக்கப்படுகிறது.அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தெருக்கள் மற்றும் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள காம்பேக்டர் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுகிறது.  இந்தக் காம்பேக்டர் குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகள் நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்ட கால நேரங்களில் காம்பேக்டர் வாகனங்களின் மூலம் வள மீட்பு மையங்கள் அல்லது உரம் தயாரிக்கும் மையங்கள் அல்லது உயிரி எரிவாயு தயாரிக்கும் மையங்கள் அல்லது கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. திடக்கழிவுகளை சேகரிக்கும் பணிகளில் சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 4,481 காம்பேக்டர் குப்பைத் தொட்டிகளும், உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 10,094 காம்பேக்டர் குப்பைத் தொட்டிகளும், சென்னை என்விரோ நிறுவனத்தின் சார்பில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 723 காம்பேக்டர் குப்பைத் தொட்டிகள் என மொத்தம் 15,298 காம்பேக்டர் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பைகளை சேகரிக்கும் காம்பேக்டர் குப்பைத் தொட்டிகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் 15  நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொண்டு உட்புறம் மற்றும் வெளிப்புறம் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு துர்நாற்றம் வீசாத வண்ணம் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மருத்துவ உபகரணங்கள், 100 படுக்கைகளுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹40 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

மாநகர பேருந்தில் ₹200 கொடுத்து டிக்கெட் கேட்ட பயணியை தாக்கிய கண்டக்டர்:  தாம்பரம் அருகே பரபரப்பு  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது