குன்னூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. குன்னூர் பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக நூற்றாண்டு பழமையான மலை ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நீராவி என்ஜினும், குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜினிலும் இயக்கப்படுகிறது. இதில், பயணிக்க சுற்றுலா பயணிகள் நாடு முழுவதும் இருந்து வந்து ஆர்வத்துடன் பயணம் செய்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர். தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே தினமும் 2 முறை ரயில் சென்று வருகிறது. தற்போது வட கிழக்கு பருவ மழை பெய்து வருவதால் நேற்று அடர்லி பகுதியில் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், மலை ரயில் ஹில்குரோ பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றினர். தொடர்ந்து மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது….