குன்னூர்,: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்த சிறுமியின் வீடியோ வைரலானது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை ஆலோரை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களின் மகள் ஸ்ரீ நிஷா (4). சிறுமி நேற்று முன்தினம் வீட்டின முன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாசலில் 4 அடி நீள பாம்பு ஒன்று நுழைந்தது. வீட்டில் இருந்தவர்கள் அச்சப்பட்டு நின்றனர். ஆனால் ஸ்ரீநிஷா யாரும் எதிர்பாராத வகையில் அந்த பாம்பை கையால் பிடித்தாள். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஸ்ரீநிஷா எவ்விதமான அச்சமுமின்றி நீண்ட நேரம் பாம்பை கையில் வைத்திருந்தாள். பின்னர் அருகே இருந்த பாம்பு புற்றுக்குள் விடுவித்தார். இதனை அருகே இருந்தவர்கள் வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர். தற்போது போட்டோவும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் அச்சமின்றி பாம்பை பிடித்து பாதுகாப்பாக விடுவித்த சிறுமியின் தைரியம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது….