குடியாத்தம்: குடியாத்தம் அருகே சாலையில் ஒற்றை யானை நடமாட்டத்தால், வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழக, ஆந்திர, கர்நாடக மாநிலத்தை இணைக்கும் குடியாத்தம் வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, கரடி மற்றும் மான் உள்ளிட்டவை உள்ளது. மேலும், ஆந்திர வனச்சரகத்தில் உள்ள யானைகள் சரணாலயத்தில் இருந்து யானைகள் தமிழக வனப்பகுதியான வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகத்தில் அவ்வப்போது நுழைந்துவிடுகிறது. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டியுள்ள குடியாத்தம் மலைக்கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. அப்போது குடியாத்தம் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.இந்நிலையில் குடியாத்தம்- பலமநேர் சாலை, தமிழக எல்லையான சைனகுண்டா சோதனைச்சாவடி அருகே ஒற்றை காட்டு நேற்று காலை 10 மணியளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. பின்னர், வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சாலையில் யானை நடமாட்டம் இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது….