Friday, September 20, 2024
Home » குடிச்சா ரூ.10 ஆயிரம் அபராதம்!

குடிச்சா ரூ.10 ஆயிரம் அபராதம்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிஇமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் உள்ள கிராமம் தார்ஜூன். இங்கு புகையிலைக்கு தடா, மதுவுக்கும் அனுமதியில்லை. மிக சுத்தமான கிராமம் என்ற பெருமையும் இதற்குண்டு. இது எப்படி சாத்தியம் என்று கேட்டால் அனைவரும் கைகாட்டுவது ஒரு இளம்பெண்ணை. அவர் பெயர் ஜப்னா சவுகான். 23 வயதே ஆன அந்த இளம்பெண்ணுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜப்னா. பட்டப்படிப்பை முடித்தவர். அந்த ஊரில் பெண்களுக்கு 10ம் வகுப்பே அதிகபட்ச கல்வித்தகுதி என்பதால் ஜப்னா பட்டப்படிப்பை முடிக்கவே பெரும் சிரமத்தை சந்தித்தார். 12ம் வகுப்பு மேல் படிக்க அருகே கல்லூரி இல்லை என்பதால் டெய்லர்  பயிற்சி பெற தந்தை அறிவுறுத்தினார். அதையும் மீறி அண்ணன் ஆதரவுடன் கல்லூரியில் சேர்ந்தார். தினமும் 18 கிலோ மீட்டர் நடந்து சென்றே அரசியல் அறிவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்தார் ஜப்னா. அவரது கிராமத்தில் பெண்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளானதால் வெறுப்படைந்த ஜப்னா அதை முடிவுக்கு கொண்டு வரவே பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்றதும் முதலில் தனது கிராமத்தில் இருந்த மதுக்கடையை அகற்றினார். கிராமத்தில் மது மற்றும்  புகையிலை விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டார். குடியும் புகையிலை பயன்பாடும் அவரது கிராமத்தில் அதிக பயன்பாட்டில் இருந்தது. அவர் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏற்றதும், முதலில் இதற்கான அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்காக பல கொலை மிரட்டல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது அந்த பஞ்சாயத்தில் எவரும் புகையிலை பயன்படுத்த முடியாது, மதுவுக்கும் தடை. அதையும்  மீறி மதுவை விற்பனை செய்தாலோ அபராதம். ஏன் திருமண விழாக்களில் கூட யாரும் மது அருந்தக்கூடாது. அப்படி மது அருந்தினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பொது இடத்தில் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இவ்வளவு நிபந்தனைகளுக்கு பிறகும் யாரும் மது மற்றும் புகையிலையை ஏறெடுத்து பார்ப்பார்களா…. இது தவிர அந்த கிராமத்தில் 16 வயது ஆனதும் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்தது. அதை எதிர்த்தது மட்டும் இல்லாமல் தடுத்து நிறுத்தியும் உள்ளார். மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு குப்பை தொட்டிகளை வைத்து அந்த கிராமத்தை மாண்டி மாவட்டத்திலேயே மிக சுத்தமான கிராமமாக மாற்றியுள்ள ஜப்னா, இந்தியாவிலேயே மிக இளம் பெண் பஞ்சாயத்து தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.– பா.கோமதி

You may also like

Leave a Comment

twenty + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi