அகமதாபாத்: குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை பாஜ பிரமுகர் அடித்து உதைத்தார். இதை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் படேல். பழங்குடியின தலைவரான இவர் பர்-தபி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கெர்காம் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் காரை வழிமறித்து ஆனந்த் படேலை தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். எம்எல்ஏ தாக்கப்பட்டதை கண்டித்து நுாற்றுக்கணக்கான காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். பாஜ பிரமுகரின் கடைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து ஆனந்த் படேல் கூறுகையில், ‘‘கெர்காமில் கிராம பஞ்சாயத்து தலைவரை நான் சந்திக்க செல்வதை அறிந்த நவ்சாரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிக்குபாய் அகிர்(பாஜ) தலைமையில் 50 பேர் இந்த தாக்குதலை நடத்தினர். எனது காரையும் சேதப்படுத்தினர். மேலும், பழங்குடியின சாதி தலைவரை இங்கு நடமாட விடமாட்டோம் என்று அவர் மிரட்டினார். பாஜவுக்கு எதிராக பேசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்’’ என்றார். …