வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டீசுவரர் கோயிலில் முறையாக அனுமதிபெறாமல் விதிகளை மீறி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள கீழ் படப்பையில் அமைந்துள்ள வீரட்டீசுவரர் கோயிலில் அனுமதி பெறாத திருப்பணிகள் நடைபெறுவதுடன், கோயில் சொத்துகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொன்மையான கல்வெட்டுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ராஜகோபுர திருப்பணிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் பல ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது. பதிவேடுகள் முறையாக பேணப்படாத நிலையில் தனி நபர்களுக்கு மின் இணைப்பு வழங்க கோயிலின் செயல் அலுவலரால் சட்டவிரோதமாக ஆட்சேபனையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது என்று கோரி இருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, அறநிலையத்துறை ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்….