கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ₹230 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.அதன் தொடர்ச்சியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு கட்டிடம் கட்ட 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக் கட்டிடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.1000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இந்த உயர்சிறப்பு மருத்துவமனையில், இதயவியல் துறை, மூளை நரம்பியல் துறை, கதிர்வீச்சு மற்றும் குறுக்கீட்டு கதிர்வீச்சு துறை, குடல் மற்றும் இரைப்பை மருத்துவ துறை, நோய் எதிர்ப்பு குருதியியல் துறை, புற்றுநோய் மருத்துவ துறை, சிறுநீரக மருத்துவ துறை ஆகிய மருத்துவ உயர் சிறப்பு பிரிவுகளும்; இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை ஆகிய அறுவை சிகிச்சை உயர்சிறப்பு பிரிவுகளையும் கொண்டு அமைக்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கணபதி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், பொதுப்பணித் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புப் பணி அலுவலர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை