டெல்லி: காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், இபிஃஎப் வட்டி விகிதம் குறைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டு இருந்த நிலையில், பல்வேறு உறுப்பினர்கள் தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும். மேலும் அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்ட எப்படி நிதி ஒதுக்க முடியும்? என கேள்வி எழுப்பினர். மேலும் தமிழகத்திற்கு தேவையான நீரை வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது என்று அவர் தெரிவித்தார். அதிமுக எம்.பி. தம்பிதுரையின் பேச்சுக்கு கர்நாடக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். …