கிணத்துக்கடவு, மே 4: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவிகள் கிராம தங்குதல் திட்டத்தின் மூலம் கிணத்துக்கடவு பகுதியில் தங்கியிருந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு, தற்போது நிலவி வரும் வறட்சி நிலைக்கு ஏற்றவாறு காளான் வளர்ப்பில் ஈடுபட்டு பயன் பெறுவது எப்படி என்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர்.
அப்போது விவசாயிகள் மத்தியில் மாணவிகள் பேசுகையில், இந்த கோடை காலத்துக்கு பால் காளான் வளர்ப்பு மிகவும் வெற்றிகரமாக இருக்கிறது. 23 நாட்களில் காளான் முழு வளர்ச்சியை பெறும். ஒரு பையிலிருந்து 2 கிலோ காளான் கிடைக்கும். நாள் தோறும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்ய வேண்டும். விவசாயத்தில் உள்ள பண்ணை கழிவுகளை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் மேம்படும்’’ என்றனர். இந்த பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.