தர்மபுரி, ஆக.27: தர்மபுரி அதியமான் கோட்டை காலபைரவர் கோயிலில், நேற்று கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், அஸ்தவ பூஜை நடந்தது. தொடர்ந்து காலபைரவர் கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பூசணி விளக்கு, நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். அன்னதானக்குழு சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவில் மிளகாய் யாகம், மிளகு சத்ரு சம்ஹார யாகம், மகா குருதி பூஜை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்திருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் நேற்று வந்திருந்தனர்.