கார்த்திகை தீபத் திருநாளையொட்டி அவல், பொரி, அகல்விளக்கு விற்பனை அமோகம்

 

திருவாரூர், நவ.26: கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவாரூர் பகுதிகளில் நேற்று அவல் பொரி மற்றும் அகல் விளக்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருநாள் விழாவானது ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. பொதுவாக அனைத்து மாதங்களிலும் கார்த்திகை நட்சத்திரத்தின் போது பொதுமக்கள் விரதம் இருந்து அதன் பின்னர் முருகன் கோயில்களில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.

மேலும் தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை பெரிய கார்த்திக்கை தினமாக கருதி இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த நாளில் வீடுகளில் பெண்கள் அகல் விளக்கு கொண்டு தீப ஒளி ஏற்றி வீட்டின் வாசல், மாடம் உள்ளிட்ட பகுதிகளில் அகல் விளக்குகளை வைத்து ஜொலிக்க வைப்பர். மேலும் அவல் பொரி கொண்டு இறைவனுக்கு பூஜை செய்வதும் வழக்கம்.

மேலும் இந்த நாளில் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்நிலையில் இந்த விழாவானது இன்று (26ம் தேதி) நடைபெறுவதையொட்டி நேற்று திருவாரூர் நகரில் தங்களுக்கான அகல் விளக்கு மற்றும் அவல் பொரி வாங்கும் பணியில் பொது மக்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்