காரைக்கால், செப்.29: காரைக்காலில் ரூ.2 கோடியில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் இயந்திரத்தை நாஜிம் எம்எல்ஏ ஆய்வு செய்தார். காரைக்கால் அடுத்த பறவைபேட்டையில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் புதிதாக ரூ.2கோடி மதிப்பில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட உரம் தயாரிக்கும் இயந்திரத்தை காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ நாஜீம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் உரம் தயாரிக்கும் செயல்முறைகளை எச்.ஆர் ஸ்கொயர் நிறுவனத்தைச் சேர்ந்த நரேந்திரன் மற்றும் ராஜு இருவரும் நாஜிம் எம்எல்ஏவுக்கு விளக்கினர். மேலும் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மலிவு விலையில் வழங்கப்படும் என கூறினர்.