காரிமங்கலம், அக்.22: காரிமங்கலம் அடுத்த மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரி(45). இவரது கணவர் தண்டபாணி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மாரி பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். மோதூரில் உள்ள தனது வீட்டை புதுப்பிக்க ஜன்னல், ஏணி ஆகிய இரும்பு தளவாட பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துள்ளார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை யாரும் இல்லாத நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்(27), நாராயணன்(40) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து மாரி அவர்களிடம் கேட்ட போது, நாங்கள் தான் திருடினோம், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என கூறி திட்டியுள்ளனர். இதுகுறித்து மாரி கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீஸ் எஸ்ஐ ஆனந்த்குமார் மற்றும் போலீசார் செல்வராஜ், நாராயணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.