காரிமங்கலத்தில் விதிமீறிய ஓட்டல்களுக்கு அபராதம்

காரிமங்கலம், செப். 22: காரிமங்கலம் நகரில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்ததுடன், விதிமீறிய 3 ஓட்டல் உரிமையாளர்களுக்கு தலா ₹1000 அபராதம் விதித்தனர். காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசைவ ஓட்டல்கள், பாஸ்ட் புட் கடைகள், சில்லி சிக்கன் கடைகள், தாபாக்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தனர்.

ஆய்வின் போது, சுமார் 7 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சமையலுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து சமையல் எண்ணெய் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை பறிமுதல் செய்தனர். விதிமீறிய 3 ஓட்டல் உரிமையாளர்களுக்கு, தலா ₹1000 வீதம் ₹3000 அபராதம் விதிக்கப்பட்டது. அசைவ ஓட்டல்கள் மற்றும் தாபாக்களில் இறைச்சி மற்றும் உணவு வகைகள் முறையாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.

விதிமீறும் ஓட்டல்கள் மற்றும் தாபாக்கள் மீது அபராதம் விதிப்பதுடன், அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். பொதுமக்கள் இதுபோன்ற உணவகங்கள் குறித்து, ஆன்லைனில் புகார் செய்யலாம் என பிரசாரம் செய்யப்பட்டது.

மாணவரை தாக்கிய சிறுவன்
உள்பட 2 பேர் மீது வழக்குதர்மபுரி, செப்.22: தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது மகன் மனோஜ்குமார்(17), தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி மனோஜ்குமார், அவரது நண்பர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில் அருகே விநாயகர் சிலை வைத்திருந்தனர். கடந்த செவ்வாய்கிழமை, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், விநாயகர் சிலை முன்பு நின்று சிகரெட் குடித்துள்ளார்.

அதனை பார்த்த மனோஜ்குமார் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த சிலர், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம், மனோஜ்குமாரை, அந்த சிறுவன் மற்றும் அவரது நண்பரான ரஞ்சித்(21) ஆகியோர் சேர்ந்து, சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த மனோஜ்குமார், தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், சிறுவன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பயிர் காப்பீடு செய்வது அவசியம்; வேளாண்துறை அழைப்பு

கப்பலூர் டோல்கேட்டை கடந்து செல்ல இரு அரசு பஸ்களுக்கு அனுமதி மறுப்பு பாஸ்டேக்கில் பணம் இல்லாததால்: இரவு நேரத்தில் பயணிகள் அவதி

திருமங்கலத்தில் பரிதாபம் தனியார் மருத்துவமனையில் ஊசி போட்ட சிறுமி பலி போலீசார் விசாரணை