காரமடை, செப்.1: காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் பகுதியில் எல்லை கருப்பராயன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு பக்தர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் இரவு பவுர்ணமியையொட்டி கோயில் வளாகத்தில் 1008 மண் விளக்குகள் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் 108 மீட்டர் நீளம் கொண்ட இந்திய தேசியக்கொடியும், இஸ்ரோவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல வண்ண கோலமும் உருவாக்கப்பட்டு 1,008 மண்விளக்கு தீபங்களும் ஏற்றப்பட்டது.
மேலும், 108 ஆன்மீகப் பெரியவர்களும், 108 தூய்மை பணியாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிலவிற்கு தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் கோவை, திருப்பூர், சென்னை, ஈரோடு மற்றும் உள்நாடு, வெளிநாடுகளைச்சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் தேன்கூடு அமைப்பினர் செய்திருந்தனர்.