திருப்பரங்குன்றம், நவ. 5: மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் இல்லத்திற்கு அருகே மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் இங்குள்ள மரக்கிளை மின்கம்பத்தில் உள்ள மின்வயரில் உரசியதால், மின்வயர் திடீரென தீப்பற்றி எரிந்தது. மின்வயரில் பற்றிய தீ மளமளவென பரவி அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரிலும் பற்றி வெடித்துள்ளது.
இதனால் பெண்கள் விடுதி முழுவதும் கரும்புகையாக மாறியது. கரும்புகை சூழ்ந்ததும் விடுதியில் இருந்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மாணவிகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த திடீர் சம்வத்தால், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.