புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே காதலனுடன் செல்ல இருந்த நர்சை கட்டையால் அடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மாணவநல்லூரை சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரது மனைவி ஜெயலட்சுமி(48). இவர்களது மகள் சத்யா(27). பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த தாய் ஜெயலட்சுமி, மகளை கண்டித்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் வீட்டில் இருந்த சத்யா, தாய்க்கு தெரியாமல் காதலனோடு தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். இந்நிலையில் காதலனோடு சேர்ந்து வாழ நினைத்த சத்யா, கடந்த மாதம் 21ம் தேதி சென்னைக்கு செல்ல தயாரானார். இதனால் தாய் ஜெயலட்சுமிக்கும், மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயலட்சுமி உருட்டுக்கட்டையால் சத்யாவை தாக்கினார். இதில் தலையில் படுகாயமடைந்த சத்யா, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிந்து ஜெயலட்சுமியை நேற்று கைது செய்தனர். காதல் விவகாரத்தில் தாயே மகளை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….