செய்யாறு, ஜூன் 20: செய்யாறு அருகே காட்டன் சூதாட்டத்தை தடுத்த எஸ்ஐக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் நேற்றுமுன்தினம் பெருங்கட்டூரில் ரோந்து சென்றார். அப்போது பெருங்கட்டூர் பஸ் நிறுத்தம் அருகே ₹10 எழுதினால், ₹700 கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி பொதுமக்களை ஏமாற்றி ஒருவர் காட்டன் சூதாட்டம் நடத்திக்கொண்டிருந்தார். இதைபார்த்த எஸ்ஐ சுந்தரம், அந்த நபரை பிடித்து விசாரித்தார். இதனால் ஆத்திரமடைமந்த அந்த நபர், எஸ்ஐயை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். விசாரணையில், அந்த நபர் வெம்பாக்கம் தாலுகா கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(47) என்பது தெரிய வந்தது. இதுகுறித்த எஸ்ஐ சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் மோரணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த காட்டன் சீட்டு கட்டுகள் மற்றும் ₹500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.