காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி தலைமை தாங்கினார். மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் நாராயணன் வரவேற்றார். கூட்டத்தில், நீதிபதி ஜோதிமணி பேசுகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு, குறிப்பாக பெண் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நமது வாழ்க்கையில் திடக்கழிவு மேலாண்மை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக கையாண்டால், நமது மாநகராட்சியை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.ஆள் பாதிஆடைபாதி என்பார்கள், அந்த வகையில் காஞ்சிபுரம் நகரம் நமக்கு உடையை தரும் உன்னதமான நகரம். சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டுமானால் மரங்களை வெட்ட விடாதீர்கள். ஒரு மரம் 150 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தால், 60 ஆயிரம் பேருக்கு ஆக்சிஜனை வழங்குகிறது. கொரோனோ தொற்று காலத்தில் பலரும் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்பட்டனர் என்பதை உணர்ந்து மரங்களை வெட்டுவதை நாம் தவிர்க்க வேண்டும். மேலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்பதை பிரித்து கழிவுகளை கையாள வேண்டும். இதை மக்கள் பிரதிநிதிகளிடம் சொல்வதற்கு காரணம், உங்கள் பகுதியில் உங்களை மீறி எந்த காரியமும் நடக்காது. எனவே மக்களுக்கு நல்லது செய்து, நல்ல மாநகராட்சியாக பெயர் எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து துணை மேயர் குமரகுருநாதன் பேசும்போது, திடக்கழிவு மேலாண்மை என்னுடைய 22வது வார்டில் உள்ளது. முதலில் நமது மாமன்ற உறுப்பினர்கள் திடக்கழிவு மேலாண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள, நாளை நேரில் சென்று பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம் என்றார். இதையடுத்து உறுப்பினர்கள் சுரேஷ், த.விஸ்வநாதன், கமலக்கண்ணன், தேவராஜ் உள்பட பலர் பேசினர்….