காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லங்கள் உரிய உரிமம் பெற்று செயல்பட வேண்டும். உரிமம் இல்லாமல் பணிபுரியும் மகளிர் விடுதி, குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் நடத்த கூடாது. மேற்படி, உரிமம் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக கருத்துருக்கள் பெறப்பட்டு பதிவு செய்து உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் நடைபெறுகிறது.
எனவே பணிபுரியும் மகளிர் விடுதி, குழந்தைகள் மற்றும் மகளிர் தங்கும் இல்லங்கள் நடத்தும் உரிமையாளர்கள், பதிவு செய்து உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் அனைத்தும் www.tnswp.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.