பெரம்பூர்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பெரம்பூர் 37வது வார்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெ.டில்லி பாபு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வியாசர்பாடி எம்.கே.பி.நகர் அரசு பேருந்து போக்குவரத்து பணிமனை எதிரே பிரமாண்ட தேர்தல் பணிமனையை நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். அப்போது, அவருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், அசன் மவுலானா, துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக பகுதி செயலாளர் முருகன், காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் ரஜினி செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். திமுக 37வது வட்ட செயலாளர்கள் செந்தமிழ் அரசு, சி.எஸ்.ரவி, காங்கிரஸ் வட்ட தலைவர்கள் ஜே.ஜே.பி.ஆனந்த், லோகநாதன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் வேட்பாளர் டில்லி பாபு வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகர், தாமோதரன் நகர் ஆகிய பகுதிகளில் தெருத்தெருவாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பிரச்னைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து அதற்கு நிரந்தர தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தார்….