கள்ளிக்குடி அருகே லாரி மோதியதால் கார் கவிழ்ந்தது மூதாட்டி பலி; 6 பேர் படுகாயம்

 

திருமங்கலம், மே 20: கள்ளிக்குடி அருகே லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிவகாசியை சேர்ந்த மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள மாதங்கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜான்சாமுவேல்(54). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காரில் ஈரோடு சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, மதுரை – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள கள்ளிக்குடி அருகே சென்றபோது, பின்னால் படுவேகமாக வந்த லாரி அவர்களது கார் மீது மோதியது.

இதில் கார் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமர்தம்(70) என்பவர் உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த ஜான்சாமுவேல், இறைநிலா, லில்லிபுஷ்பம், எர்ணாஸ், லியோன், டேவிட் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் அவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து