திருமங்கலம், அக். 8: கள்ளிக்குடி அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்துகண்ணன்(63). பழைய இரும்பு மற்றும் பேப்பர்களை விற்பனை செய்யும் தொழிலாளி. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்ற முத்துகண்ணன் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் இவர் குறித்து தகவல் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த நாகராஜன் என்பவரது தோட்டத்து கிணற்றில் முத்துகண்ணன் உடல் மிதந்ததாக, கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் முத்துகண்ணன் உடலை மீட்டனர். விசாரணையில், குளிக்க சென்ற போது தவறி அவர் கிணற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. உடலை மீட்ட கள்ளிக்குடி போலீசார் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.