வாழப்பாடி, மே 16: வாழப்பாடி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து 35லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், 200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்ததால் 12 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனை மற்றும் நடமாட்டத்தை தடுக்க, போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப்பகுதியில், கருமந்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கள்ளச்சாராயம் விற்ற, மணியார்குண்டம் பகுதியை சேர்ந்த குமார் (எ) கிருஷ்ணகுமார் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 35 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், பாச்சேடு கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்சுவதாக வந்த தகவலின் பேரில், கரியகோயில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஓடை பகுதியில் இருந்த 200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.