திருவண்ணாமலை, ஜூன் 23: கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலையில் நேற்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கே.ஆர். பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், போலீஸ் தடையை மீறி அண்ணா நுழைவு வாயிலில் இருந்து ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும், பாஜகவினர் தொடர்ந்து தடை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். எனவே, மாவட்ட தலைவர் உட்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட அனைவரும், நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.