ஆவடி: அம்பத்தூர் புதூரைச் சேர்ந்தவர் எல்லப்பன் என்ற அஜய் சத்யா (34) இவர், அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது கடையில் திருமுல்லைவாயல், மூர்த்தி நகரைச் சேர்ந்த கவிதா (25) என்பவர் வேலை பார்த்தார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் அழகு நிலையத்தின் மாடியில் உள்ள வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தண்டையார்பேட்டையை சேர்ந்த, சிந்து என்ற இளம்பெண் அழகு நிலையத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவருடன் எல்லப்பனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்ட கவிதா, இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் எல்லப்பன், கவிதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கவிதா பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு, எல்லப்பன், சிந்து ஆகிய இருவரும் சேர்ந்து அடிக்கடி செல்போனில், அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, கவிதா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் ஆவடியில் உள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு கவிதா திடீரென்று வந்தார். பின்னர், அவர் அங்கு தன் உடலின் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து மீட்டனர். பின்னர், அவரை துணை கமிஷனர் அலுவலகத்துக்கு உள்ளே அழைத்து சென்றனர். அதன் பிறகு, கவிதாவிடம், துணை கமிஷனர் மகேஷ் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறினார். துணை கமிஷனர் மகேஷ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்….